பக்கத்தில் இருந்த தேவாலயத்தில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தவர்கள் எனக்கு மதியம் ஆனதை உணர்த்தினார்கள்.வண்டியை எடுத்துக்கொண்டு தெருமுக்கில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் 4 ரூபாய் கொடுத்து கிங்ஸ் சிகரெட்டை வாங்கி பத்த வைத்து விட்டு மீண்டும் கிளம்பினேன்.அடுத்த வாரம் அப்பாவிற்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது வந்து கொண்டிருந்தது.அரை மணி நேரத்தில் ஈ.சி.ஆர் கடற்கரையில் உள்ள பெப்பில்ஸ் இடத்தை அடைந்தேன்.எப்போதும் போல் காரின் பின்புறம் வோட்கா பாட்டிலை வைத்துக்கொண்டு புகை விட்டுக்கொண்டிருந்தார்கள். “என்ன மச்சான் இவ்ளோ லேட்டு, சரக்க காக்க வைக்க கூடாது டா” என்று கூறிக்கொண்டு பாட்டிலை என் கையில் கொடுத்தார்கள். வோட்காவில் வாய் கொப்பளித்துவிட்டு கிளாஸில் ஸ்ப்ரைட்டுடன் கலந்து ஊற்றினேன். இரண்டு ரவுண்ட் போயிருக்கும்,போலீஸ் ஜீப் வந்தது.ஒரு ஏட்டையாவும் இரண்டு போலீஸ்காரர்களும் வந்தார்கள். ” ங்கோத்தா, வந்துட்டாய்ங்க டா , தே.... பசங்க ஞாயிற்றுகிழம கூட நிம்மதியா குடிக்க விட மாட்டேங்குறாய்ங்க” என்று ஒருவன் கூறியதற்கு இன்னொருவன் “ஞாயிற்றுகிழம மட்டும் தான் குடிக்குற மாதிரி பேசுற, எல்லா நாளும் தானே டா பாடு குடிக்குற என்றான். எப்போதும் போல் ஒரு குவாட்டரை ஏட்டையாவுக்கு நாங்களே மரியாதையாக கொண்டு போய் குடுத்து விட்டு வந்தோம்.சிறிது நேரம் கழித்து அவரே சைட் ஸ்னாக்ஸ்களையும் வாங்கிவிட்டு சென்றார். ”என்ன மச்சான், எப்ப பாத்தாலும் தனியாவே வர,எதாவது ஃபிகர கிகர செஞ்சோமா, அப்படியே எங்கட்டயும் லைன்ல விட்டோமானுலாம் கிடையாது...” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே என் கைப்பேசி ஒலித்தது.வோட்காவை குடித்து கொண்டே பேசினேன்.எதிர்முனையில் என் அம்மா.எங்கடா இருக்க, அப்பா என்னவோ மாதிரி இருக்காருட, சீக்கிரம் வாடா என்று பதற்றத்துடன் கூறினாள். ”இந்தா வந்துட்டேன் மா” என்று கூறிவிட்டு என் கையில் இருந்த கிளாசை முடித்து விட்டு உடனே கிளம்பினேன்.
வரும் வழியில் எத்தன பேரிடம் வாங்கிய சாபமோ வீட்டு வாசலுக்கு வந்தவுடன் டயர் பஞ்சர். உள்ளே அவசரமாக சென்றேன். அமைதியாக படுக்கையிலேயே இருந்தார். ”அப்பா அப்பா” என்று அழைத்தேன். என்னை பார்த்துவிட்டு ”உலகத்துல காத்தே இல்லடா, ரொம்ப அமைதியா இருக்கு” என்றார். ”ஏன் தல சீவல” என்றார். கையால் முடியை வாரிக்கொண்டேன். என் அம்மாவை பக்கத்தில் அழைத்து கையை பிடித்துக் கொண்டார். ”வீட்டு கதவு மூடிருக்கா?“ என்றார்.”போய் மூடிட்டு வா” என்றார். கதவை மூடிவிட்டு வரும் போது என் அம்மாவிடம் ”காம்ப்ளான் சூட குடுமா” என்றார்.என்னை அருகில் கூப்பிட்டு ”உண்ட்ட சொல்லிட்டனா” என்றார். என்னதுப்பா? என்றேன். அமைதியாக இருந்தார். என்னதுப்பா? என்றேன். மீண்டும் அமைதியாக இருந்தார். டாக்டர்ட்ட போவோமா என்றேன். பதில் ஏதும் கூறாமல் என்னையே பார்த்துக்கொண்டு ”உண்ட்ட.......என்று கூறும் போது நான் போய் டாக்ட்டர கூட்டிட்டு வரேன் என்று எழுந்து பக்கத்தில் இருந்த சரஸ்வதி நர்ஸிங் ஹோம் சென்றேன்.நர்ஸ் மட்டும் வந்தார்கள். அவர்களை ஆட்டோவில் அழைத்து வீட்டுக்கு வந்தேன்.வீட்டிற்குள் வந்தவுடன் என் அம்மா ”என்ன சத்தி ஆச்சு,சத்தி எங்க? சத்தி எங்கனு கேட்டுட்டே அமைதியா இருக்கா” என்று அழுதுகொண்டே கூறினாள். பக்கத்தில் வந்து ”அப்பா” என்றேன். நர்ஸ் எல்லாம் அட்ங்கிட்டு இருக்கு என்று சாதாரணமாக சொன்னாள். ஹாஸ்பிட்டல் எடுத்துட்டு போவோம் என்றேன். ”வேலைக்காவாதுப்பா“ என்று மீண்டும் சாதாரணமாக சொன்னாள். மூச்சு தொண்டையில் அடங்கி கொண்டிருந்தது.பெற்று வளர்த்த பெருமான் சுடுகாடு செல்லும் நேரம் வந்ததை உணர்ந்தேன். கையும் ஒடவில்லை, காலும் ஓடவில்லை. அப்பாவின் கை கால்கள் குளிர்ந்து இருந்தது. எதுவும் அற்றவனாய் உணர்ந்தேன்.
என்னை தொட்ட அந்த கைகள் மீண்டும் தொட்டு விடாதா, ஒரே ஒரு தடவை என்னை பேர் சொல்லி கூப்பிட்டு விட மாட்டாரா , அந்த சிரிப்பை ஒரு முறை பார்த்து விட மாட்டேனா, என் அம்மாவை ஒருமுறை கூப்பிடுவதை பார்த்துவிட மாட்டேனா,அந்த காம்ப்ளானை குடித்து விட மாட்டாரா என்று இப்படி எல்லாத்துக்கும் என் மனம் ஏங்கியது. கண்ணீர் பெருகியது. என் அம்மா என்னை பார்த்துவிடக்கூடாது என்று எண்ணி முகத்தை மறைத்துக் கொண்டே அழுதேன். ஏதோ சொல்லனும்னு காலையில இருந்து சொல்லிக்கிட்டு இருந்தையே, சொல்லீருப்பா..என்று அவசர அவசரமாக என் அப்பாவிடம் கூறினேன். எந்த அசைவும் இல்லை...மெது மெதுவாக அடங்கிக்கொண்டிருந்தார். ”மணி,மணி” என்று பாட்டி என் அப்பாவை கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள். மூச்சு பிரிவதை எனக்கு பார்க்கும் அளவிற்கு சக்தியில்லை என்று உண்ர்ந்தேன். ஒரே ஒரு முறை என் அப்பா மூச்சு விடும் போது ஏற்படும் அசைவை உற்று பார்த்தேன். உயிரோடு இருக்கும் என் அப்பாவை பார்த்தாவாரே கண்களை அப்படியே மூடிக்கொண்டேன். உயிர் இல்லாத என் அப்பாவின் உடலை பார்த்து தான் ஆக வேண்டும் என்பது கூட அந்த சமயத்தில் எனக்கு தோன்றவில்லை. வீட்டை விட்டு வெளியே ஒடினேன்.வாசலில் ஓடிப்போய் நின்று கொண்டு கதவை சாத்தினேன்.காத்து கூட வெளியே வராத அளவிற்கு கதவை அழுத்தி சாத்தினேன். என்னிடம் என்ன சொல்ல வந்தார் என்பதை நினைக்க நினைக்க உடல் முழுதும் வெறிபிடித்து பின் அழுகையிடம் தோற்றது. என் அப்பா பட்ட கஷ்டங்கள் என்னை பல முறை “ அய்யோ, அய்யோ” என்று கம்மிய குரலில் சொல்ல வைத்தது. கத்த வேண்டும் போல் இருந்தது. மாடிப்படி அருகே இருந்த ஓஸ் பைப்பின் துவாரத்தில் என் வாயை வைத்து முடிந்த அளவு கத்தினேன். பின் நிகழ்வுகளை நினைத்து என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன். கதவு லேசாக திறந்தது. அப்பா தாத்தாவிடம் சென்றுவிட்டார் என்று நினைத்தேன். இதற்கு மேலேயும் என்னால் வெளியே நிற்க முடியவில்ல .உள்ளே செல்வதற்கு கதவை திறக்கும் போது என் அம்மாவின் குரல் காட்டிக்கொடுத்தது. அப்பா அமைதியாக படுத்திருந்தார்.
நான் கோழையாகிப் போன அந்த தருணங்களில் என் அப்பாவிடம் இருந்து எனக்கான அந்த தொலைந்து போன வார்த்தைகள் அந்த சாத்தி வைத்த கதவின் வழியே தைரியமாக இரு மகனே என்பதை மட்டும் உணர்த்தின என்று நம்பினேன்.அந்த தொலைந்து போன வார்த்தைகள் இன்று வரை தொலைந்தோ மறைந்தோ தான் இருக்கின்றது.

No comments:
Post a Comment