
கடலுக்குள் சென்றிருக்கிறேன். நடுக்கடலுக்கு சென்றதில்லை. உண்மையில் சொல்ல போனால் நடுக்கடல் எங்கு இருக்குறது என்றே தெரியாது.அலைகள் கரையை நோக்கியே சென்றுகொண்டிருந்தன. இரவு எட்டு மணி இருக்கும். நேரம் காலம் தெரியாமல் எதையோ சிந்தித்து கொண்டிருந்தேன். எல்லோரும் பரபரப்பாக தென்பட்டார்கள். கிறிஸ்துமஸ் முடிந்து ஆறு நாள் ஆகியும் பலபல என்று சேலைகள் மின்னிகொண்டுதான் இருந்தன. காலையில் வேலைக்கு செல்லும் போது இருக்கும் சோர்வு கலந்த பரபரப்புத்தன்மை அவர்களிடத்து இல்லை. எதையோ சாதித்து விட்டுத் தான் வீடு திரும்புவேன் என்று சபதம் போட்டது போல் சென்று கொண்டு இருந்தார்கள் என்று தான் எனக்கு தோன்றியது.
பெட்ரோல் பங் வாசலில் கியூ கட்டி நின்றனர். மறுபடியும் பெட்ரோல் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று நினைத்தேன். பங்க் ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வேலை செய்து கொண்டிருந்தனர். கார்கள் இரண்டு சக்கர வாகனங்களை விரட்டிக் கொண்டே இருந்தன. சிவப்பு மஞ்சள் பச்சை நிறங்களை பல பேர் மறந்து இருப்பார்கள் போல சிக்னல் போஸ்ட் கம்பங்கள் அனாதையாக நின்று கொண்டிருந்தன என்னுடன் சேர்ந்து. சாலைகளும் மரங்களும் கைகுழந்தைகள் தூக்க சொல்லி அழுவது போல் சிணுங்கி கொண்டு இருந்தன. அவற்றை சாலை ஓரம் சோளக்கருது மசாலா கடலை வித்துகொண்டிருந்தவர்களும் செருப்பு தைக்கும் தொழிலாளிகளும் பஞ்சர் கடை வைத்திருப்பவர்களும் அரவணைத்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு புத்தாண்டையும் சூரியனுக்கு முன் வான வேடிக்கையுடன் கொண்டாடிவிடுகிறோம் என்ற கர்வத்துடன் மேலே இருப்பவன் எப்போதாவது தான் கீழே நோக்குவான் என்பதை போல் நிலா முழுமையாக தன் முகத்தை காட்டிக்கொண்டு தனக்காகத் தான் இத்தனையும் என்று நினைத்தவாறே
பிரகாசித்து கொண்டிருந்தான்.
இந்துக் கோயில்களும் கிறித்தவ கோயில்களும் பெரும்பாலான குடும்பங்களை வரவேற்று கொண்டிருந்தன. டாஸ்மாக் கோயில்களில் தான் மக்கள் அதிகம். கோழிகளும் மீன்களும் தங்கள் உயிரை தியாகம் செய்து கொண்டிருந்தன, அவைகளுக்கெல்லாம் புத்தாண்டு இருந்தால் நாம் தான் அவைகளின் கோயில்பலகாரங்கலாக இருப்போம் என்று தோன்றியது. மத போதகர்கள் எல்லாம் கூவத்தில் துவைத்து காய வைத்த கரை இருந்தும் தெரியாத வெள்ளை அங்கியை அணிந்து வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டிருந்தனர். கிருத்துவர்கள் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு நாத்திகனை எதிர்த்து போர் நடத்திக்கொண்டிருந்தனர். இந்துக் கோயில்களும் பல சினிமா பாடல்களின் மெட்டுகளுக்கு கடவுள்களை நடனப் போட்டிக்கு பங்கேற்க செய்தனர். இவர்களுடன் மார்கழி மாதப் பணியும் சேர்ந்து கொண்டது. இளவட்டங்களின் போதைக்குரல்களும் பல விடுதிகளின் மின்சாரம் சேமிக்கும் திட்டமும் நட்சத்திரங்களுக்கு தெரியாமலும் தெருவிளக்குகளுக்கு தெரிந்தும் நடந்துகொண்டிருந்தன.
அந்த நொடியும் வந்தது. மழலை குரட்டைகளை களைத்த வண்ணம் புத்தாண்டு பிறந்தது. குழந்தைகள் தூக்க கலக்கத்தில் அழுது கொண்டிருந்தன. வானத்தில் புதிதாக நட்சத்திரங்கள் தோன்றி மறைந்தன. தற்காலிக நட்சத்திரத்தின் ஊடாக சூரியனை தோற்கடித்த கர்வத்துடன் சிரித்துகொண்டிருந்தான் நிலா. அண்ணா நகர் சிக்னலில் ஒரு பாட்டியின் கடையில் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அந்த வெடி சத்தங்களின் ஊடே வானத்தை பார்த்து கொண்டிருந்தேன். ஒரு சிறுமி அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த ஒவ்வொரிடத்தும் வந்து பசிக்குது அண்ணா எதவாது வாங்கி கொடுங்க அண்ணா என்று கூறினாள். அங்கு இருந்த சிலர் அந்த பாட்டி கடையில் வாழைபழம் கடலை மிட்டாய் வாங்கிகொடுத்தனர். அதை சாப்பிட்டுவிட்டு அங்குட்டும் இங்குட்டும் அலைந்தவள் மெதுவாக அந்த பாட்டியிடம் வந்து புத்தாண்டு வாழ்த்துகள் கூறினாள். நான் அவளையே பார்த்துகொண்டிருக்க அவள் அங்கு இருந்து இருட்டுக்குள் சென்றுவிட்டாள். நான் பத்து ரூபாய் கொடுத்து மூன்று சிகரெட் கேட்டேன். அந்த மூதாட்டி ஒரு டப்பாவுக்குள் இருந்து காது கேட்கும் மிசினை எடுத்து மாட்டினாள். நான் சிகரெட் வாங்கி பத்த வைத்து விட்டு வானத்தை நோக்கியவாறே புகையை சிரித்துக் கொண்டிருந்த நிலவை பார்த்து ஊதினேன். அந்த சிறுமி விட்டு சென்ற வாழ்த்துக்கள் என் புகையுடன் சேர்ந்து கொண்டு காற்றில் மறைந்து அநாதை ஆனது என்று மட்டும் தோன்றியது. மூன்று ரூபாய் சிகரெட்டுடன் சேர்த்து அந்த பாட்டி விரக்தியையும் விற்று விட்டால் என்று நினைத்தேன். கடல் அலைகள் கரையை தொட்டுவிட்டு உள்ளே சென்றிருக்கும் வினாடிகள் ஒன்றோ இரண்டோ மூன்றோ ....ஆனால் அதன் ஆர்பரிப்பு தொடக்கத்தில் இருந்து பார்த்தால் ஒவ்வொரு புத்தாண்டும பிறக்கும் அந்த தருணம் போன்றது தான்.

No comments:
Post a Comment